வாசகர் வட்டம்

Tuesday, October 02, 2018

கண்டியை ஆண்ட இறுதி மன்னன் கதையை வேறொரு கோணத்தில் சொல்லும் திரைபடம் -வீடியோ

) திரைபடத்தின் பெயர் -‘Giri Vasi pura’ (கிரி வெசி புர)

 . நன்கு அறிந்த பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் அவர்கள் இந்த திரைபடத்தை பற்றி தனது முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவை கீழே பார்க்கலாம் -நன்றி

 கண்டியினை ஆண்ட நாயக்கர் வம்சம், நயவஞ்சகத்தால் அழிந்தொழிந்த கதை. ‘ஹங்குரங்கெத’ பிரதேசத்தில் விவசாயக்கடும்பத்தில் பிறந்த ‘கண்ணுச் சாமி’, எனும் இளைஞன், ஶ்ரீவிக்ரம ராஜசிங்கனாக்கபட்ட கதையையும், மதவாதம்,இனவாதம் என்ற பேரில், பேரின வாதிகள் தம் சுயநலத்திற்காக எவ்வாறெல்லாம் சூழ்ச்சிகள் செய்து அம்மன்னனைப் பலிகடாவாக்கினார்கள். என்பதையும், வரலாற்று ஆசிரியர்கள் எவ்வறெல்லாம் பொய்யுரைத்து அவனக் கொடுங்கோலனாகச் சித்தரித்துள்ளார்கள்

, அவனது உண்மையான குண இயல்புகள் என்ன, என்பதையெல்லாம் மிக நேர்த்தியாகவும் நெகிழ்ச்சியோடும் சித்தரித்திருந்தார்-திரைக்கதாசிரியரும் இயக்குனருமான திரு. Daevinda Kongahage.

தமிழில் பேசவேண்டிய கதை மாந்தர்கள் தமிழிலேயே பேசினார்கள். பிரித்தானிய பாத்திரங்கள் ஆங்கிலத்திலேயே பேசினார்கள். பெரும்பாலான உரையாடல்கள் சிங்கள மொழியில் அமைந்திருந்தாலும், இதனை ஒரு மும்மொழித் திரைப்படம் என்றுதான் வகைப்படுத்தவேண்டும்.
கண்ணுச்சாமி என்ற ஶ்ரீவிக்ரம ராஜசிங்கனாக நடித்த Pubudu Chathuranga நிறைவாகவே அந்த பாத்திரத்திற்கு உயிரூட்டினார்

. மகாராணி ரங்கநாயகி (வேங்கட ரெங்கம்மாள்)பாத்திரமேற்ற நிரஞ்ஜணி ஷண்முகராஜாவுக்கு இது ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் என்றுதான் சொல்லவேண்டும். விழாவில் திரைப்படக்குழுவினர் அவருக்களித்த முக்கியத்துவம் கலைஞர்கள் மத்தியில் ’வேற்றுமையிலும் ஒற்றுமை’ பேணுவதற்கு முன்னுதாரணமாயிருந்து.
 நிரஞ்சணியும் அப்பாத்திரத்தை மிகுந்த தேர்ச்சியுடன் சித்தரித்திருந்தார். தமிழகத் திரைப்படங்களிலும் கூட, பாடல்கள் இயற்றிய பெருமைக்குரிய, நமது மண்ணின் கவிஞர் ‘பொத்துவில் அஸ்மின்’ தனித்தமிழ் வரிகளில் ஒரு முழுப்பாடலையே இயற்றியிருந்தார்.
மீனா பிரியதர்ஷணி என்ற இளம் சிங்களப்பாடகி தெளிவான உச்சரிப்புடன் இனிமையாகவே பாடி, அஸ்மினுக்குப் பெருமை சேர்த்திருந்தார். வரலாற்றுத் திரைப்படங்களென்றாலே, அரண்மனை, அந்தப்புறம், யுத்தக்காட்சிகளையெல்லாம், கற்பனைக்கெட்டாத அளவு, பலமடங்கு மிகைப்படுத்தியும் Graphics உத்திகள் மூலம் பிரம்மாண்டப்படுத்தியும் காட்டுவார்கள். உண்மையில் அன்றைய மக்கள் தொகையினைக் கணக்கிட்டால் சில நூற்றுக்கணக்கில் மட்டுமே போர் வீரர்கள் இருப்பார்கள், பழங்காலத்து அரண்மனைகள் ( இப்போதும் சில பேணப்பட்டுள்ளவை போன்று) அப்போது உண்மையில் எப்படி இருந்திருக்கும் என்பதையெல்லாம் மிக இயல்பாக சித்திரித்திருந்தார்கள்.
 எந்தவொரு இனத்தையும் கொச்சைப்படுத்தாமல் அதேவேளை பெரும்பான்மை இனத்தில் அன்றிருந்த சந்தர்ப்பவாதிகளைத் தோலுரித்துக் காட்டிய துணிச்சல் பாராட்டிற்குறியது. தனக்குத் துரோகமிழைத்த ‘எகலப்பலை’யின் குழந்தைகளைப் பெற்ற தாயைக்கொண்டே உரலில் போட்டு இடிக்கவைத்த ‘கண்டிய மன்னன் கதையை’, நடிகர்திலகம் கூட ஒரு திரைப்படத்தில் நாடகமாக நடித்திருப்பார்.
அவை எல்லாம் எவ்வளவு பச்சைப் பொய் என்பதை, இயக்குனர் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். திரைப்படம் நிறைவடையும் போது சூழ்லைநிலைக் கைதியாக மாறிப்போன கண்ணுச்சாமின் மேல், நம் எல்லோரையும் அனுதாபம் கொள்ள வைத்ததில்- இயக்குனர் வெற்றியடைந்துள்ளார்.

 மிக முக்கிய விடயம்- திரைப்படத்தின் நிறைவில் பின்னணியில் ஒலிக்கும் குரல் மூலமாக -‘பேரின வாதிகளாய் செயல்பட்ட S.W.R.D. பண்டாரநாயக்க மற்றும் J.R.ஜயவர்தன இருவரதும் பூர்வீக ‘வேர்கள்’ என்ன என்று சுட்டிக்காட்டிய அசாத்தியத் துணிச்சலுக்காக, இயக்குனர் Daevinda Kongahage அவர்களுக்கு ஒரு பூங்கொத்து வழங்கிப் பாராட்ட வேண்டும். இனப் பாகுபாடின்றி எல்லோருமே, ஒருமுறை பார்க்கவேண்டிய திரைப்படம்.

கண்டி அரசனை பற்றி  இவ்வளவு காலமும் இப்படி தான்  பொய்யாய்காட்டி இருந்தார்கள் கூத்துகளாக அது பற்றி பார்க்க விரும்பின் கீழே உள்ள லிங்கை தட்டி பாருங்கள்
https://sinnakuddy1.blogspot.com/2013/05/blog-post.html

1 comment:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செய்திக்கு நன்றி! படத்தை இங்கு திரையிடுவார்களோ தெரியாது.