வாசகர் வட்டம்

Thursday, March 23, 2017

எழுத்தாளர் அசோகமித்திரனின் படைப்புக்கள்-வீடியோ

தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த அசோகமித்திரனுக்கு வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.

 ஆந்திர மாநிலம் செகந்தராபாதில் 1931ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி பிறந்த அசோகமித்திரனின் இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத் நகரில் படித்து வளர்ந்த அசோகமித்திரன், தந்தையின் மறைவுக்குப் பிறகு 21-ஆவது வயதில் சென்னையில் குடியேறினார். எஸ்.எஸ். வாசனின் ஜெமினி ஸ்டுடியோவில் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்துவந்த இவர், அந்தப்பணியிலிருந்து விலகி முழுநேர எழுத்தாளரானார். கணையாழி இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

 1954ஆம் ஆண்டு முதல் எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரன், சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரைகள் என பல்வேறு தளங்களில் படைப்புகளைத் தந்தவர். இவருடைய `அப்பாவின் சிநேகிதர்' சிறுகதைத் தொகுப்பிற்காக 1996ல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

கரைந்த நிழல்கள், தண்ணீர், ஒற்றன், 18வது அட்சக்கோடு, ஆகாயத் தாமரை, இன்று, மானசரோவர் உள்ளிட்ட நாவல்கள், விடுதலை, இருவர் உள்ளிட்ட குறுநாவல்கள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை இவரது படைப்புகளில் அடங்கும்.

நவீன தமிழ் இலக்கியத்தில் மிகவும் போற்றப்படும் எழுத்தாளரான அசோகமித்திரனின் படைப்புகள், சமகால நகர்ப்புற நடுத்தர மக்களின் சிக்கல்களை, கொண்டாட்டங்களை, துக்கங்களை மிகச் சிறப்பாக முன்வைத்தவை. பெரும் துயரத்தை எளிய சொற்களில் வெளிப்படுத்திவந்த அசோகமித்திரன் சாதாரணமான கதாபாத்திரங்கள், சம்பவங்கள் மூலம் மிகச் சிறப்பான வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தியவர்.

 பழகுவதற்கு மிகவும் எளிமையானவரான அசோகமித்திரன், சிறந்த நகைச்சுவை உணர்வும் மிக்கவர். நன்றி -தமிழ் பிபிசி